சென்னை தொழிற்சாலையில் HP லேப்டாப், கம்ப்யூட்டர்கள் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் எச்.பி நிறுவனத்தின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எச்.பி நிறுவனம் மற்றும் இந்தியாவின் டிக்சன் நிறுவனத்தின் துணை நிறுவனம் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் கையெழுத்திட்டன.
தமிழ்நாட்டில் எச்.பி நிறுவனத்தின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எச்.பி நிறுவனம் மற்றும் இந்தியாவின் டிக்சன் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ்' கையெழுத்திட்டன.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து ஆப்பிள் நிறுவனம் சார்பாக ஐபோன் தயாரிக்கப்படுகிறது. மேலும், பல உற்பத்தி ஆலைகள் சென்னை அருகே அமைந்துள்ளன.
இந்நிலையில், புகழ்பெற்ற எச்பி நிறுவனம் சார்பில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க, அந்நிறுவனத்துடன் இந்தியாவின் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஷ்னினி வைஷனவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எச்பி லேப்டாப், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.
மேலும், இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கம் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான புதிய ஆலையை பேட்ஜெட் நிறுவனம் இதன் ஒரகடம் தொழிற்சாலை வளாகத்தில் அமைகிறது.
நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு உற்பத்தி துறையில் இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரூ.3380 கோடியில் இந்த ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்த ஆலை 1,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஆலையில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் லேப்டாப் தயாராகி வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan