மீண்டும் திறக்கப்பட்ட 1,600 ஆண்டு பழைமை வாய்ந்த நாளந்தா பல்கலைக் கழகம் : 10 அரிய தகவல்கள் இதோ!
இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
1,600 ஆண்டு பழைமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,900 இருக்கைகள் உள்ளன. தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்கள், சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய ஒரு அரங்கம், ஒரு ஆசிரிய மன்றம் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வளாகம் ஒரு உமிழ்வற்ற பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தி அமைப்பு, கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு, 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை அமைப்புகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மைகளுடன் தனிச்சிறப்புடன் உள்ளது.
இப்பல்கலைக்கழகம் ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், மாணவர்கள் தங்கிப் படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. நாளந்தாவின் பழங்கால சிதைவு எச்சங்கள், 2016-ம் ஆண்டில் ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
நாளந்தாவைப் பற்றிய அரிய விஷயங்கள்:
1. நாளந்தா மகாவிஹாரா என்பது மகதாவில் (இன்றைய பீகார்) ஒரு பண்டைய புத்த மடாலயம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகும். இது பௌத்த தத்துவத்தின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன், பல பாடங்களுக்கான விவாதத்தின் செழிப்பான இடமாக இருந்தது.
2. புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது சூரியமின்சக்தி ஆலை, நீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் மறுசுழற்சி ஆலை மற்றும் நூறு ஏக்கர் நீர்நிலைகள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1900 இருக்கைகள் கொண்ட இரண்டு கல்வித் தொகுதிகள் 40 வகுப்பறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
300 இருக்கைகள் கொண்ட இரண்டு அரங்குகள், 550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி மற்றும் 2000 நபர்கள் வரை தங்கக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈர்க்கக்கூடிய உள்கட்டமைப்பு உள்ளது.
3. நாளந்தாவின் முதன்மை போதனை பௌத்த தத்துவமாகும். மேலும், தர்க்கம், இலக்கணம், வானியல், மருத்துவம், கணிதம் ஆகிய பாடங்களும் கற்றுத்தரப்பட்டன.
4. நாளந்தா பல்கலைக் கழகம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கல்வி கற்கும் இடமாக இருந்தது. அதாவது, 800 வருடங்கள் இந்தியாவில் அறிவின் புகலிடமாக இருந்தது.

5. பூஜ்ஜியத்தைக் கண்டுப்பிடித்த ஆரியபட்டா ஆறாம் நூற்றாண்டில் நாளந்தாவின் தலைமைப்பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
6. யுவான் சுவாங் என்னும் சீன புத்த துறவி இந்தியாவுக்குப் பயணம் செய்து நாளந்தாவில் கற்பித்து அவரும் பல பவுத்த நூல்களைக் கற்றுத் தேர்ந்து சீனாவுக்குத் திரும்பி சீன மொழியில் அவற்றை மொழிபெயர்த்தார்.
7. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பனை ஓலைச்சுவடிகள் நிறைந்த ஒரு பிரமாண்டமான நூலகம் இருந்தது. சுமார் ஒன்பது மில்லியன் கையெழுத்துப் பிரதிகள் தர்மகஞ்ச் என்ற நூலகத்தில் சேமிக்கப்பட்டன.
8. புராதன நாளந்தா ரத்னசாகர், ரத்னோதாதி மற்றும் ரத்னரஞ்சக் என்ற மூன்று கட்டிடங்களைக் கொண்டிருந்தது. கட்டிடங்களில் ஒன்று ஒன்பது மாடிகளைக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பக்தியார் கிலிஜி பல்கலைக்கழகத்தை அழித்து நூலகத்திற்கு தீ வைக்கும் வரை நூலகங்கள் நன்றாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
9. பல்கலைக்கழகத்தின் அழிவுக்குப் பிறகு, அதன் இடிபாடுகள் 1812 இல் பிரான்சிஸ் புக்கானனால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1861 இல் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்களால் மதிப்பிற்குரிய நாளந்தா பல்கலைக்கழகமாக அடையாளம் காணப்பட்டது. நாலந்தா தளம் ஜனவரி 9, 2009 அன்று உலக பாரம்பரியத்தின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டது.
10. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வையினால் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க, நாளந்தா பல்கலைக்கழக மசோதா, ஆகஸ்ட் 12, 2010 அன்று ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 21, 2010 அன்று மாநிலங்களவையிலும், ஆகஸ்ட் 2010 இல் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா செப்டம்பர் 21, 2010 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது.